logo
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல்:ரூ.2.47 லட்சம் அபராதம்- லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேர்  கைது

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல்:ரூ.2.47 லட்சம் அபராதம்- லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேர் கைது

20/Jun/2021 04:05:36

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக போலீஸார்  302 வாகனங்கள் பறிமுதல் செய்துரூ.2.47 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும்  லாட்டரி ,கஞ்சா விற்ற 202 பேரையும்  கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 28.6.2021  வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி- சசிமோகன் அறிவித்திருந்தார்.

27-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 230 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 342 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 285 இருசக்கரவாகனங்களும், 17 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரேநாளில் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  இதேபோல் மாவட்டத்தில் குற்றச் சம்பவத்தை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட எஸ்பி- சசிமோகன் எடுத்து வருகிறார்.

அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 7 நாட்களில் மாவட்டம் முழுவதும் லாட்டரி விற்பனை, கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீட்டுக் கட்டுகள், 21.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 1.5 பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 850  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Top