27/Jun/2021 09:25:19
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் போடப்பட்டு வந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் மையங்களில் நள்ளிரவு முதல் மக்கள் குவியத் தொடங்கினர். இதனால்
டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
எனினும் சில மையங்களில் தள்ளுமுள்ளு வாக்குவாதம்
ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், அவர்கள்
சிரமமின்றி தடுப்பூசி போடும் வகையில் மாவட்ட
நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி
போடும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் போடப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதைப்போல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும்
தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தடுப்பூசிகள் வருவதைப் பொறுத்து வழக்கம்போல்
மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.