logo
கர்ணனை நேரில் நாம் பார்த்ததில்லை... நம்மிடையே  பாலம் கல்யாணசுந்தரம் வாழ்ந்து கொண்டிப்பதை பார்க்கலாம்..!

கர்ணனை நேரில் நாம் பார்த்ததில்லை... நம்மிடையே பாலம் கல்யாணசுந்தரம் வாழ்ந்து கொண்டிப்பதை பார்க்கலாம்..!

14/Jun/2021 12:02:18

கர்ணனுக்கு  சற்றும் குறையாத ஒரு கொடையாளியாக  இன்றும் நம்மிடைய இருப்பது தமிழகத்துக்கும் பெருமைநாட்டுக்கு கௌரவம் உலகத்துக்கு இவர் ஓர் அதிசய மனிதர்.. அவர்தான் பாலம் கல்யாணசுந்தரம்.

ஆங்கிலத்தில் வெளியான பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் கதை புத்தகத்தைப் படித்த இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவரது வாழ்க்கை என்னை நெகிழச்செய்கிறது. அவரது வாழ்க்கைக் கதை படத்தில் நானே நடிக்கிறேன். கல்யாண சுந்தரத்தின் இளமைக்கால கதாபாத்திரத்தில் எனது மகன் அபிஷேக்பச்சன் நடிப்பார் என்று இந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் சென்னை வந்து பாலம் கல்யாணசுந்தரத்தைச் சந்தித்துப் பேசி, பட வேலைகளைத் தொடங்கி உள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. இதைப் பற்றிப் பேச வந்தவரிடம் பாலம் கல்யாணசுந்தரம் ஒரு வேண்டுகோள் என்று சொன்னார். படத்துக்கு எனக்குத் தரப்படும் தொகையை அப்படியே பொதுத்தொண்டுக்கு வழங்கிவிட வேண்டும்.

ஏழைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பாலம் கல்யாண சுந்தரம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில் உள்ள ஏர்வாடியில் இருந்து 7 கிமி தூரத்தில் உள்ள மேல கருவேலங்குளம் என்ற ஊரில் 1940 -ஆம் ஆண்டு மே 10 -ஆம் தேதி வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

அப்பா பால்வண்ணநாதன் பிள்ளை, அம்மா தாயம்மாள். அப்பா ஊர் தலைவர். அந்தக் கிராமத்தில் மொத்தமே நாற்பது வீடுகள். கிராமத்தில் பள்ளிக்கூடம், சிறுகடைகள் உட்பட எதுவும் கிடையாது. 15 கிலோமீட்டர் பயணம் செய்துதான் படிக்க முடியும். இவரோடு கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா, இரண்டு அண்ணன்கள். இவர்களை அடுத்து, நகரத்துக்குப் படிக்கப் போனார் பாலம் கல்யாணசுந்தரம்.

ஊரில் இவர் மட்டும் தான் ஒரே ஆளாக பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்தார். வேறு யாருமே படிப்புக்காக ஊரை விட்டு வெளியே போகாத நிலையில், ஒருவேளை கிராமத்துப் பிள்ளைகளும் தன் கூட பள்ளிக்கு வந்தால் பேச்சுத் துணைக்கு நண்பர்கள் கிடைப்பார்களே என்று நினைத்து அவர்களையும் பள்ளிக்குக் கூட்டிப்போக நினைத்தார். அம்மாவும் பாட்டியும் நிறைய காசு கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் காசை எல்லாம் சேர்த்து வைத்து, கிராமத்துப் பிள்ளைகளை பள்ளிக்குக் கூட்டிப் போவார். அப்படித்தான் இவரது கல்விக்கான முதல் பணி ஆரம்பித்தது.

பாலம் கல்யாணசுந்தரம் தந்தை பால்வண்ணநாதன் பிள்ளை அவர்கள் பல கிராமங்களில் உள்ள கோவில்களில் அறங்காவலராக இருந்தார். ஒருநாள் கோவில் பணியாளர், சிவன் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து பிள்ளைவாள் வீட்டில் கொடுத்தார்.

அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்குப் பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்து விட்டார் பால்வண்ணன்நாத பிள்ளை அவர்கள். இவை சிறுவனாக இருந்த கல்யாணசுந்தரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தாய் தாயம்மாள் கல்யாணசுந்தரத்திடம் 3 அறிவுரைகளை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.  

1. எதற்காகவும் எப்போதும் பேராசைப்படாதே.

2. எது கிடைத்தாலும் குறைந்தது பத்தில் ஒன்றை தானம் செய்.

3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்இந்த மூன்றினாலும் உன் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்.

இவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம், பாளையம்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் .தி.தா.இந்துக் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் சென்று படித்து தன் பெயருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என்று பட்டமாகப் போட்டுக்கொண்டார்.

1963-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தார் கல்யாணசுந்தரம். அப்பொழுது இந்திய சீனப் போருக்காக பிரதமர் ஜவகர்லால் நேரு நிதி உதவி கேட்டு வானொலிப் பேச்சை நிகழ்த்தினார். தேசியப் பாதுகாப்பு நிதிக்காக உடனே தன்னிடமிருந்த எட்டரைப் பவுன் மைனர் தங்கச் சங்கிலியை காமராசரிடம் கழற்றித் தந்துவிட்டார். இதன் வழியாக முதல் நிதியுதவி கொடுத்த இந்திய, தமிழக மாணவனாக இவர் பெயர் எங்கும் பரவியது.

இவரிடம் உங்களுக்கு பிடித்த தலைவர்கள் யார் என்று கேட்டால், மகாத்மா காந்தி, காமராஜர், பெரியார், அண்ணாதுரை என்றே பதில் வரும். பாலம் கல்யாணசுந்தரம் தன்னிடம் இருக்கும் குறையாக ஆரம்பத்தில் நினைத்தது குரலை. கீச்சுக் குரலாக இருக்கும். பலரும் கேலி செய்வார்கள். மன உளைச்சல் அதிகமாகி, தற்கொலை எண்ணம் கூட வந்திருக்கிறது ஒரு முறை.

இவருக்கும் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனுக்கும் கடிதம் மூலம் தொடர்பு இருந்த நேரம் அது. அவர் கல்யாண சுந்தரத்திடம் சொன்னார், உனக்கு முன்னால் உன் அண்ணன்கள் பள்ளிக்குப் போனாங்க. ஆனா, அவங்க யாரும் தங்கள் கூட கிராமத்துப் பிள்ளைகள் படிக்கணும்னு நினைக்கல. நீ அப்படி நெனைச்ச. அதுதான் நீ.

நீ என்ன குரலில் பேசுறேங்கறது உன் அடையாளம் இல்லை. உன்னைப் பற்றி இந்த ஊர் ஜனங்க என்ன பேசுறாங்க.? அதுதான் உன் அடையாளம். ஊருக்குப் போய் முதலில் நீ செய்து கொண்டு இருக்கிற நல்ல காரியங்களை சரியான முறைப்படி செய். உன்னால் முடிந்த உதவிகளை படிக்கும் குழந்தைகளுக்குத் தொடர்ந்து செய்  தமிழ்வாணன் சொன்னதைக் கேட்டு, அப்படியே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். இப்படி வறியவர்களுக்கு உதவுவதற்காக பாலம் என்ற அமைப்பைப் பின்னாளில் இவர் உருவாக்கினார்.

கீச்சுக்குரலை வைத்துக்கொண்டு தன்னால் ஆசிரியர் பணிக்கு எல்லாம் போக முடியாது என்று நம்பினார் கல்யாணசுந்தரம். ஆனாலும், தான் எப்படியும் ஆசிரியர் ஆகி விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். ஒரு முறை மிமிக்ரி கலைஞர் ஒருவர் இவரது பள்ளிக்கு வந்து பல குரல்களில் பேசி அசத்தினார். அவரிடம் சென்றுன்னாலும் உங்க மாதிரி பல குரலில் பேச முடியுமா என்று கேட்டார்.

கண்டிப்பாக முடியும் என்று சொல்லி, கல்யாணசுந்தரத்துக்குப் பயிற்சி கொடுத்தார். ஆச்சரியம்.. கம்பீரமான குரலிலும் பேச வந்தது. கல்லூரியில் பேராசிரியரானார். பிறகு வேலை பார்த்த அத்தனை ஆண்டுகளும் தன்னிடம் படித்த மாணவர்களுக் குத் தன் உண்மையான குரல் தெரியாத அளவுக்கு மாறிப் பேசினார். கம்பீரமான குரலில் பேசி வகுப்பு எடுத்தார்தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் கல்லூரியில் நூலகராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

ஒரு முறை பேராசிரியர்களுக்கான நிலுவைத்தொகை ரூபாய் ஒன்றரை லட்சம் கிடைத்தது. தன் பகுதி கவுன்சிலரைச் சந்தித்து கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்யும்படி மொத்தப் பணத்தையும் அவரிடம் கொடுத்தார்.

ஒருநாள் திடீர் என கவுன்சிலர் இவரை அழைத்தார். சென்றால் பெரிய மேடை அமைத்து, பொன்னாடை போர்த்தி, கல்யாணசுந்தரம் கொடுத்தப் பணத்தை அவரிடமே திரும்பக் கொடுத்து, இப்ப மாணவர்களுக்குக் கொடுங்க சார், உங்களைப் பார்த்தாவது மத்தவங்க நல்லது செய்யட்டும் என்று சொன்னார். பத்து ஆண்டுகள் தன் சம்பளத்தை பைசா செலவழிக்காமல், அப்படியே கல்வியில் பின்தங்கிய குழந்தைகள் படிக்கக் கொடுத்தார்.

பல செய்தியாளர்கள் இவரைத் தேடி வந்து பேட்டி எடுத்துப் பத்திரிக்கைகளில் போட்டார்கள். அதற்குப் பிறகு பலரும் இவரைத் தொடர்பு கொண்டு பணமாகவோ பொருளாகவோ உங்களிடம் தருகிறோம். நீங்க அதை மத்தவங்களுக்குக் கொடுங்க என்று சொன்னார்கள். இவர் அதை வாங்க மறுத்ததோடு, நேரடியாக அவர்களே உதவுகிற மாதிரி வழி செய்தார்.

கல்விக்கு மட்டுமில்லை, சென்னை வெள்ளக் காலத்தில் அடிப்படைப் பொருட்களை வாங்கி தேவைப்படும் மக்களுக்கு அந்தந்த குழுக்கள் வழியாக விநியோகிக்கவும் செய்தார். இதன் வழியாக இவரது அன்புப் பாலம் அமைப்புப் பரவலாக மக்கள் மத்தியில் போய் சேர்ந்தது.

பேராசிரியர் பதவியிலும், பின் நூலகர் ஆகவும் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தனது சொந்தச் செலவிற்கு இரவு நேரங்களில் ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் ரூ.30 லட்சத்தையும் முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம்.

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் ஐக்கிய நாட்டு சபை இவருக்கு ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் (Man of Millinium) என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.30 கோடி) பரிசாக கொடுத்தனர். கொடுத்த அனைத்தையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து, உலகில் உள்ள கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் கல்யாணசுந்தரம்.

அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் .பி.ஜே. அப்துல்கலாம்‌. இன்னொருவர் பாலம் கலியாணசுந்தரம். இருவருமே தமிழர்கள். பில் கேட்ஸ் இவரின் அமைப்புக்கு பல கோடிகளை தந்துள்ளார். கேட்ஸ் தன்னுடைய அறக்கட்டளையின் சார்பாக இவரைப் பற்றி 22 மொழிகளில் புத்தகம் போட்டுள்ளார்.

இவரைப்பற்றி தெரிந்து கொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரைத் தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஆனால் சில மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்துக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிவிட்டுத் திரும்பி விட்டார். இருப்பினும் ரஜினியை காண அவர் வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து செல்வார். ரஜினியும் மாறுவேடம் அணிந்து இவரை காண சைதாப்பேட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்று வருவதும் உண்டு.

ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் A Most Notable intellectual in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன், நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு மட்டுமே உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது. 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக .நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் இவரும் ஒருவர்.

பாலம் கல்யாணசுந்தரம் ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவச் செலவிற்காக மக்களிடம் தலா ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து சென்னை மேயர், தமிழக சட்டசபை சபாநாயகர், பல மாநில கவர்னர்கள், அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் .பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.

இந்த கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து கொண்டுதான் இருக்கிறார் பாலம் கல்யாணசுந்தரம். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இவர் மக்களிடம் அன்பளிப்பாகக் கேட்பது, அரிசியை. அப்படி வந்த அரிசியை மக்களுக்குக் கிடைக்கும் படி செய்து கொண்டிருக்கிறார், இந்த ஓயாத அலைகள் பாலம் கல்யாணசுந்தரம்.

1953-ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது இந்த சமுதாய உழைப்பு இன்றும் (67 வருடம்) தொடர்கிறது .இவருக்கு  ஜூன் 10-ஆம் தேதி பிறந்தநாள்  80 வயது நிறைவடைந்து 81 தொடங்கிற்று.

பணத்தை பெரிதாக நினைக்காத  இந்த மாமனிதர் மூலம் நாம் உதவி செய்ய ஒரே வழி இவர் நடத்தி வரும் அன்புபாலம் -என்ற மாத    இதழுக்கு ஆண்டு சந்தா ரூ.200- செலுத்தலாம். உங்கள் பணம் ஒரு குழந்தைக்கு உதவும்.

பிறந்தோம் வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாது, இனியாவது ஒரு ஏழை மாணவனுக்கு விளம்பரமின்றி கல்வி கொடுப்போம். மாமனிதர் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களை   வாழ்த்தி  வணங்குவோம்.  (பல்வேறு தரவுகளிலிருந்து தொகுத்து எழுதப்பட்டது)

Top