logo
ஈரோடு மாநகராட்சியில் தன்னார்வலர்கள் மூலம்   தினமும் 1.30 லட்சம் வீடுகள் கண்காணிப்பு: வீடு வீடாக பரிசோதனை

ஈரோடு மாநகராட்சியில் தன்னார்வலர்கள் மூலம் தினமும் 1.30 லட்சம் வீடுகள் கண்காணிப்பு: வீடு வீடாக பரிசோதனை

10/Jun/2021 03:33:27

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சியில் தன்னார்வலர்கள் மூலம்   தினமும் 1.30 லட்சம் வீடுகள் கண்காணித்து வருகின்றனர். வீடு வீடாக பரிசோதனை செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆம் அலை வேகமாக பரவியது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்த போதிலும் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. குறிப்பாக  ஈரோடு மாநகராட்சியில் முதலில் 600 பேர் வரை பாதிப்பு இருந்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்  போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

10 நடமாடும் வாகனங்கள் மூலம் தினமும் கொரோனா அதிகம் தாக்கமுள்ள பகுதியில்  சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி கொரோனா பரிசோதனைஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதில் மாநகராட்சி பணியாளர்கள் 200 பேர், தன்னார்வலர்கள் ஆயிரத்து 200 பேர் நியமிக்கப்பட்டு ஒரு வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகள் இவர்கள்  தினமும் கண்காணித்து வருகின்றனர். இதில் காய்ச்சல் சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள் விவரங்களை குறித்து வைத்து இது தொடர்பாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கின்றனர்

. மாநகராட்சி சார்பில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் லேப் டெக்னீசியன்கள்  பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் பாதிப்போ உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின்  தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தினமும் இதுபோன்று 400 பேருக்கு நடமாடும் ஆட்டோ மூலம் லேப் டெக்னீசியன்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையால் தற்போது மாநகர் பகுதியில் தொற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் மாநகர் பகுதியில் 270 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

Top