10/Jun/2021 12:51:56
புதுக்கோட்டை, ஜூன்: தமிழகத்தில் குறுங்காடுகளை பராமரிக்கத் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (10.6.2021) நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று மரக்கன்றுகளை வழங்கிய பின்னர் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறியதாவது:
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன தமிழகத்தை நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவேன் என அறிவித்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பாக இருக்கக் கூடிய திட்டங்கள் தொடர்பாக உரிய முடிவினை அறிவிப்பார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழையளவு
மிகவும் குறைந்துவிட்டது.
குறுங்காடுகள் அமைப்பதன்
பயனாக பல்லுயிர் காடுகள் உருவாகும். மக்களுக்குத்தேவையான
சுத்தமான காற்று கிடைக்கும். தற்போது காற்றில்
கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரித்து காற்று
மாசுபாடு அடைந்துள்ளது.
அதிகமான மரங்களை வளர்ப்பதால் அந்த மரங்கள் கார்பன்டைஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு சுத்தமான ஆக்சிஜனை வெளியிடும் வேலையைச் செய்கின்றன. இதற்காகவே குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறுங்காடுகளில் நடப்படும் மரக் கன்றுகளை தொடர்ந்து பராமரித்து மரங்களாக உருவாக்கும் வகையில் தேவையான பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
தமிழகத்தில் நாட்டு மரங்கள் நட்டு
வளர்க்க முன்னுரிமை வழங்கப்படும் . வேலிக்கருவை தைல மரங்கள் போன்ற வெளிநாட்டு மரங்களை நட்டு வளர்ப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்
பூவதி, க. நைனாமுகமது, கே. ராமகிருஷ்ணன், எம்எம். பாலு, த.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.