logo
ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு தமிழக அரசு நிதியுதவி: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு தமிழக அரசு நிதியுதவி: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

08/Jun/2021 08:17:46

சென்னை, ஜூன் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:

தமிழ் மொழியின் வளர்ச்சியில் உலக நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களும் முக்கியப் பங்கு வகிக்கும் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963-இல்  தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிறுவனம், தெற்காசிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள் பண்பாட்டியல், மொழிகள் துறையுடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது.

தமிழகத்திற்கு வெளியே உள்ள இரண்டு பெரிய நூலகங்களில் சிகாக்கோவுடன், கொலோனும் ஒன்றாக உள்ளது. இதில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகள் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

2014 -இல் கொலோன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் எடுத்த முடிவின்படி, தன் பேராசிரியரான உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020-இல் ஓய்வு பெற்ற பின் தமிழ் பிரிவை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் தமிழ் பிரிவை இயக்கத் தேவையான நிதியின்  பாதியை 2018 அமெரிக்க வாழ் இந்தியர்கள் திரட்டி பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால் தமிழ் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் மற்றொரு பாதி தொகையான  ரூ.1 கோடியே 24 லட்சத்தினை தமிழக அரசு அளிப்பதாக 2019-இல் கூறியது. இதை கொலோன் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் இந்த தொகைக்கு அளிக்க கொள்கை ரீதியான முடிவும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் அறிவிப்புடன் நின்று விட்ட அதிமுக அரசின் பல அறிவிப்புகளில் இதுவும் ஒன்றாக மாறி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டிய  தொகை இன்னும் அளிக்கப்படவில்லை.

கடந்த மார்ச் மாதத்துடன் அமெரிக்க வாழ் இந்தியர் அளித்த தொகையும் தீர்ந்தமையால் தமிழுக்கான நிதித்தொகை பற்றாக்குறையில் சென்று கொண்டிருக்கிறது. இதை சமாளிக்க ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள் இணைந்து ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு எனும் அமைப்பைத் துவக்கி 12 நாட்டினருடன் இணைந்துள்ளனர். அவர்கள் சுமார் 32,000 டாலர் நிதி திரட்டியுள்ளனர். இதை கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்து சமாளித்து வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு தருவதாக உறுதி அளித்த ரூபாய் 1 கோடியே 25 லட்சம்  நிதியை அளித்து கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொர்ந்து இயங்கிட  தமிழக முதல்வர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன்.

 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் தமிழக முதல்வர்  எங்கள் கட்சியின்  கோரிக்கையை ஏற்று கொலோன் பல்கலைக்கழக தமிழ் பிரிவு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அதில் தெரிவித்துள்ளார்

Top