logo
ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஊதியம் வழங்கக் கோரிக்கை

ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

06/Jun/2021 09:31:48

புதுக்கோட்டை, ஜூன்:  ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின்  புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் .ஜீவன்ராஜ்மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள  மனு விவரம்:

  2020-2021 -ஆம் கல்வியாண்டில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெறவில்லை. எனினும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்குச் சென்று மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்டங்களை பெற்று வழங்குதல் உள்ளிட்ட கல்வித்துறையால் அறிவுறுத்தப்படும் பணிகளை மேற்கொண்டனர். அப்போதெல்லாம் ஆசிரியர்களோடு இணைந்து நாள்தோறும் துப்புரவுப் பணியாளர்களும் வேலை செய்துள்ளனர்;.

ஆனால், அவர்களுக்கு கடந்த  ஆண்டு ஆகஸ்ட்(2020) முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்  அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பேரிடர் காலத்தில் அவர்கள் குடும்பத்தை நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1400-க்கும் மேற்பட்ட  தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை  வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.

                                                                 

Top