logo
பணிகள் முடிந்து தயார்நிலையில் உள்ள களமாவூா் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுமா ?

பணிகள் முடிந்து தயார்நிலையில் உள்ள களமாவூா் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படுமா ?

31/May/2021 12:28:59

புதுக்கோட்டை, மேதிருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள களமாவூா் ரயில்வே கிராசிங்  மேம்பாலப் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்து விட்ட  நிலையில் இந்த மேம்பாலம்   எப்போது பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

 

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பாதை குறுக்கிடும் ஒரேயொரு இடம் களமாவூா். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும்  இந்த இடத்தில் உள்ள ரயில்வே கேட் அடைக்கப்படும்போது  கடும் போக்குவரத்து நெருக்கடியும், நீண்ட நேரக் காத்திருப்பும்  ஏற்படுகிறது என்பதால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே மேம்பாலம் அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டது.

மேம்பாலம் திட்டமிடப்படும் பகுதியில் நீா்வழிப் பாதைகள் இருப்பதாகக் கூறி சிலா் நீதிமன்றம் சென்றபோது  அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மேம்பபாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

இதற்காக வலதுபுறத்தில் தற்காலிக பக்கவாட்டு அணுகு சாலையும் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் இம்மேம்பாலத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் செலவுகளுக்காக ரூ. 20 கோடி வரை கூடுதலாக ஒப்பந்ததாரா் கேட்டதாகவும் அதற்கு ஒப்புதல் கிடைக்காததால்  பணி முடிக்காமல் கிடப்பில் போட்டதாகக் கூறப்படுகிறது.

 கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அரைகுறை பணிகளுடன் மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டன.

 

மக்களவைத் தேர்தலுக்குப்பின்னர், திருச்சி எம்பியாகத் தோ்வு செய்யப்பட்ட சு. திருநாவுக்கரசா், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடன் இப் பாலத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பாலத்தின்  பக்கவாட்டுப் பகுதிகள் பலமிழந்திருந்தது  தெரியவந்தது. இதையடுத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து அதைச் சீரமைக்கும் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அதன்பிறகு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ரயில் பாதைக்கு அருகேயுள்ள இணைப்புப் பகுதிகள் உடைத்து மீண்டும் மண் கொட்டி- கல் கட்டி பலப்படுத்தப்பட்டன. தாா் ஊற்றி சாலையும் புதிதாக சீரமைக்கப்பட்டது. இடதுபுறத்தில் பாதுகாப்புச் சுவா் அமைக்கப்பட்டது. கடந்த சில 6 மாதங்க ளுக்கு முன்னரே  பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனால், கொரோனா பொது முடக்கம், சட்டப்பேரவைத் தோ்தல் எனக் காலம் கடந்து போனது.

 

இது தொடர்பாக  திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா்  வெளியிட்ட அறிக்கையில் பாலப்பணிகள் முடிந்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏன் திறந்துவிடாமல் தாமதம் செய்ய வேண்டும் எனவும்மாவட்ட நிா்வாகம் பாலத்தைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஒரு மாதம் கடந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படவில்லை. பக்கவாட்டில் போடப்பட்டுள்ள தற்காலிக சாலையும் மோசமாக பழுதடைந்துவிட்டது. பொது முடக்கக் காலம் என்றாலும் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையைக் கடந்துச் செல்கின்றன.எனவே, களமாவூா் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் பொதுமக்கள்.

Top