30/May/2021 07:50:33
சென்னை, மே.30: கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி- இஎஸ்ஐ- மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(மே30) ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் பரிசோதனைகளை அதிகரித்தல், தொற்று பாதித்தவர்களை விரைந்து கண்டறிந்து தனிமைப்படுத்தி
சிகிச்சையளித்தல், புதிய
தொற்று ஏற்படாத வகையில் தடுப்பூசி செலுத்துவதை
அதிகப்படுத்துதல் என
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தமிழகத்தில் அதிகரித்து வந்த
கொரோனா தொற்றானது கடந்த சில தினங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின்கடந்த 20.05.2021 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில், கொடிசியா வளாகத்தில் சுமார் 820 படுக்கை வசதிகள் மற்றும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 380 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். முதல்வரின் அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 13 புதிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களும், அவற்றில் 3,135 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் (30.5.2021) கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி- இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்தும் தினசரி பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு குறித்தும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்து சிகிச்சைகள் குறித்தும் அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.
இம்மருத்துவமனை,
கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிகிச்சை அளிப்பதற்காக
382 சாதாரண படுக்கை வாதிகள், 678 ஆக்ஸிஜன் வசதியுடன்
கூடிய படுக்கை வாதிகள். 213 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகள் என
பொத்தம் 1273 படுக்கை வசதிகளுடன் தற்போது செயல்பட்டு
வருகிறது.
பின்னர், முழு பாதுகாப்பு கவச உடை (PPE KIT) அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அதிதீவி்ர சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகளின் நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்தியாவிலேயே
முதல் முறையாக மாநில முதல்வர் ஒருவர் கொரோனா நோய் தொற்று சிகிச்சைப் பிரிவிற்கு நேரில் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து நிகழ்வு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனா தொற்றால் பாதித்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில், வனத்துறை அமைச்சர் .கா.ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்காபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள். கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்எம்.ஏ.சித்திக், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக செயல் இயக்குநர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணை திரு பெ. குமாரவேல்பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்