29/May/2021 03:33:40
சென்னை, மே: கேரளக் கவிஞர் ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி அளிப்பதாகவும் பரிசுத்தொகையை கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக் கொள்ளுமாறும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மீதான
குற்றச்சாட்டுகளை முன்வைத்து
பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர்
இவ்விருதுக்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். இதையடுத்து
வைரமுத்துவுக்கு விருது
வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், ஓ.என்.வி இலக்கிய விருதை
திருப்பித் தருகிறேன் எனவும் பரிசுத்தொகையை கேரளா
முதலமைச்சரின் நிவாரண
நிதியில் சேர்த்துக் கொள்ளுமாறும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காழ்ப்புணர்ச்சி கொண்ட
சிலபேரின் குறுக்கீட்டினால்
அந்த விருது மறுபரீசிலனைக்கு உள்ளாக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய்
அறிகிறேன்.
இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குருப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெற தவிர்க்கவே விரும்புகிறேன்.ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாதெமிக்கே திருப்பி அளிக்கிறேன்.
எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். மற்றும் மலையாள மண்மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய தொகை ரூ.2 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.
இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னை பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும் ஊடக உறவுகளுக்கும் என் நன்றி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.