21/May/2021 10:41:08
புதுக்கோட்டை, மே: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த அரவம்பட்டி ஊராட்சியில் அம்பலகாரத் தெரு உள்ளது. இங்கும் குடியிருக்கும் மக்கள் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம். இந்த இடம் வாரி மற்றும் வண்டிப்பாதை என்ற வகைப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே 9 நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள்
குடியிருக்கும் இடத்திற்கும்,
வாரிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலர்
மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் மேற்கண்ட இடத்தைப்
பார்வையிட்டு வகைமாற்றம் செய்து எங்களுக்கு மனைப்பட்டா
கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த
மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை உரிய அதிகாரிகளைச் சந்தித்து மனைப்பட்ட கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.