29/Sep/2020 04:45:04
ஈரோடு:தமிழக அரசு உத்தரவின் பேரில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு கடந்த 21-ஆம் தேதி முதல் தொடங்கி 27 -ஆம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில், பிளஸ்-1 துணைத் தேர்வு (செப்.29)இன்று தொடங்கியது. ஈரோட்டில் பிளஸ் 1 துணைத்தேர்வு எழுத 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுவோருக்கு 6 மையங்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோருக்கு 2 மையங்களும் அடங்கும். இன்று காலை தேர்வு தொடங்கியது தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு நுழையும் முன் அவர்களது கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டன. வெப்ப மானியைக் கொண்டு அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதேபோல் 8 -ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வும் இன்று தொடங்கியது.இந்த தேர்வுக்காக ஈரோடு கருங்கல்பாளையம் ,ஈரோடு கார்மல் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு வரும் 7-ஆம் தேதி நிறைவு பெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.