29/Sep/2020 10:42:17
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்தும் கரோனா நோய்யின் தாக்கம் குறித்தும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 - ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியாக காலை 10 மணிக்கும், மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகல் 3 மணிக்கும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு, புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக கல்லூரிகள் திறப்பு, நோய்த் தொற்று அதிகமுள்ள 15 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவுறுத்தல்களை ஆட்சியர்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.