28/Sep/2020 02:58:21
புதுச்சேரி: விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்ட மசோதாவினை வாபஸ் பெற வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
விதிமுறைகளுக்கு உட்பட்டு போராட்டம் நடத்துகிறோம். விவசாயத்தை வர்த்தகமாக்குவது, உரிய விலை கொடுப்பது, அத்தியாவசிய பொருட்களுக்கான விலை ஆகிய 3 சட்டத்தை திருத்தியுள்ளனர். இதில் மக்களவையில் பெரும்பான்மை உள்ளது, மேலவையில் பெரும்பான்மை இல்லாதபோதும், அதனையும் மீறி ஜனநாயக படுகொலை செய்து மசோதாவினை நிறைவேற்றியுள்ளனர். வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென எதிர்கட்சிகள் தெரிவித்தபோதும், இதையெல்லாம், நடத்தாமலே நிறைவேற்றியுள்ளனர். இதனை கண்டித்து எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஏற்கக்கூடாது என ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தும், இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த விவசாயிகள் விரோத சட்டத்தை கண்டித்து ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டம் நடக்கிறது.
இந்த மசோதா மூலமாக சிறு விவசாயிகள் இடத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்வதோடுவிவசாயிகளுக்கு அடிமையாக்கி கூலியாக்கி விடுவார்கள். பொருட்களை எந்த மாநிலத்தும், வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் நலனை ஒட்டுமொத்தமாக அடகு வைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொழிலாளர் சட்டத்தில் கை வைத்துள்ளனர். மோடி அரசசை அனைவரும் எதிர்க்க வேண்டும். இந்த போராட்டத்தை நடத்தக்கூடாது என கவர்னர் எனக்கு கடிதம் எழுதினார்.
முதலில் நான் காங்கிரஸ் கட்சித் தொண்டன், அதன்பிறகுதான் முதல்வர், என்னிடம் இந்த பூச்சாண்டியெல்லாம் காட்ட வேண்டாம், பஞ்சாப் முதல்வரே, மத்திய அரசின் மசோதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராடியிருக்கிறார். இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலைப்படமாட்டோம். இதற்காக எந்த தியாகமும் செய்ய தயராக இருக்கிறோம். இது ஆரம்பம்தான் கிராமம் , கிராமமாக சென்று மக்கள் சக்தியை திரட்டுவோம். எனவே விவசாயிகள் எதிரான 3 சட்ட மசோதாவினை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இதனை வலியுறுத்தியே விவசாயிகள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் என்றார் முதல்வர் நாராயணசாமி.