12/Apr/2021 10:38:40
புதுக்கோட்டை, ஏப்: கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு அளிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கம், அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், கோயில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நாட்டுப்புற கலைஞர்கள் நாடகக் கலைஞர்கள் கிராமிய நையாண்டி மேளக் கலைஞர்கள் மற்றும் மேடை மெல்லிசை கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் திருவிழா காலம் என்பதால் இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்த முடியும். இதில் விலக்கு அளிக்கவில்லையெனில் ஏராளமான கலைஞர்கள் வாழ்வாதத்தை இழந்து வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
எனவே தமிழக அரசு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து மேடை மற்றும் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியிடம் மனு வழங்கப்பட்டது.