logo
உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாஜக அரசு:  இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாஜக அரசு: இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

11/Apr/2021 10:54:12

புதுக்கோட்டை, ஏப்: உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளதாக  மத்திய பாஜக அரசுக்கு   விவசாயிகளின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ். தனபதி வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ (Indian Farmers Fertiliser co-operative Limited - IFFCO) டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை 58.33 விழுக்காடு,  காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை ரூ. 1200-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ 700 விலை உயர்ந்து ரூ. 1900  என வரலாறு காணாத விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது..


ரூ 1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ 615 உயர்ந்து ரூ1775க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ 950 ல் இருந்து ரூ 400 உயர்ந்து, தற்போது ரூ 1350 ஆக விற்கப்படுகின்றது.

பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்களில், முதல் இரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் படுக்கின்றன.சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மா னிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால் அவை, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. 

உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை, பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருவதாக இப்கோ நிறுவனம்  காரணம் கூறியுள்ளது. ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய பாஜக அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தை குறைத்து விட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 விழுக்காடு வரை உயர்த்தி விட்டன.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உர மானியத்திற்கு ரூ 1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ 79 லட்சத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ 54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப் பட்டதால்தான், இரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உரத்தின் விலைகளை உயர்த்தி இருப்பது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே,  மத்திய அரசசு உடனடியாகம டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

                                                   


Top