logo
12,000 பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அரசுக்கு  வேண்டுகோள்

12,000 பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அரசுக்கு வேண்டுகோள்

28/Sep/2020 09:40:41

கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து  தமிழ்நாடு  அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் 2012 -ஆம் ஆண்டு 16,549 பகுதிநேர ஆசிரியர்களை  ரூபாய் 5,000 தொகுப்பூதியத்தில் நியமித்தார். இதற்காக அப்போது 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதில் தற்போது 4,000 பேர் வேலையில் இல்லை. 12,000 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றார்கள்.தற்போது 7,700 சம்பளமே தரப்படுகிறது.

இதற்கு இப்போதும் சுமார்  100 கோடி என்ற அளவிலே  செலவிடப்படுகிறது. 10 ஆண்டுகள் ஆகும் போதும், இன்னும்  பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதால் அரசின் எவ்வித பணப்பலனும் கிடைக்காமல் தவிப்பதோடு,    போனஸ் மகப்பேறுவிடுப்பு EPF ESI எதுவும் கிடைக்காமல் மிகுந்த  சிரமப்படுகின்றார்கள்.இவர்களில் பெரும்பாலும் ஏழை விவசாய குடும்பத்தினர். பலர் முதல் தலைமுறை பட்டதாரிகள். மேலும் பொருளாதாரத்தில்  பின்தங்கிய மக்களாவர்.

இதில் 200 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்பெண்கள் 50 சதவீதம் இதில் பணியாற்றி குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வருகின்றார்கள்.இவர்களை முன்னேற்ற வேண்டியது அரசின் கடமையாகும். 16,500 துப்புரவு பணியாளர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டு பணி முடித்தவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.

இவர்களுக்கு பின்னர் பணியில் அமர்த்தப்பட்ட 5,000 துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பள்ளிக்கல்வி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.மேலும், சிறப்பு இளைஞர் படையினர் ஏராளமானோர்  காவல்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.ஏற்கெனவே தொகுப்பூதியத்தில்  பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்த ஏராளுமானோர் பின்னர்  பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.ஆனால் 2017-ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.இதற்காக 3 மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 4 ஆண்டுகளாக  செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.இதனை செயல்படுத்திட கேட்டு கொள்கிறோம்.எனவே. அதிமுக ஆட்சி காலத்திலேயே சட்டசபை அறிவிப்பை நடைமுறைபடுத்தி தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

மக்கள் நலப்பணிகளுக்கு எத்தனையோ கோடிகளை செலவிடும் அரசு, தமிழக மக்கள் கல்விக்காக பணியாற்றும்  பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கி, தற்போதைய தொகுப்பூதிய நிலையில் இருந்து மாற்றி காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி புதியவாழ்வு வழங்க  வேண்டுகிறோம்

எங்களின் ஆயிரக்கணக்கான கருணை மனுக்களை பரிசீலனை செய்யுங்கள். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்ற அனைத்து கட்சிகளின் பரிந்துரையை செயல்படுத்துங்கள்மேலும், பகுதிநேர ஆசிரியர்களை  பணிநிரந்தரம் செய்திட அரசு தனது கொள்கை முடிவை வெளியிட முன்வர வேண்டும் எனவும்  கேட்டு கொள்கிறோம்.

 

Top