logo
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.97  அடியாக   உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.97 அடியாக உயர்வு

27/Sep/2020 07:15:37

ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளைநிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. அதைப்போன்று கோயம்புத்தூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது இதனால் பில்லூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 101 அடியை நெருங்கியது. 102 அடி வந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம்.அதன்படி வெள்ள அபாய எச்சரிக்கையும் கரையோர பகுதி  மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில மீண்டும் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாலை பவானிசாகர் அணை 102  அடியை எட்டியது. இந்நிலையில், நேற்று இரவு முதல் நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.இந்த காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.97 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,987   கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 650 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும் என மொத்தம் 2,950 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Top