logo
ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்: திமுக. வேட்பாளர் சு.முத்துசாமி உறுதி

ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்: திமுக. வேட்பாளர் சு.முத்துசாமி உறுதி

22/Mar/2021 05:54:06

ஈரோடு, மார்ச்: ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என திமுக வேட்பாளர் சு.முத்துசாமி பிரசாரத்தின் போது மக்களிடத்தில் உறுதி அளித்தார்.

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சு.முத்துசாமி, மேற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக மூலப்பாளையம், நேருஜி வீதி, சாந்தி நகர், விவேகானந்தா வீதி, பாசுமை பாரதி நகர், காந்தி நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது, அவர் பொதுமக்களிடத்தில் பேசியதாவது: ஈரோடு மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்சனைகளுக்கு கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்க வில்லை. மக்களின் எண்ணங்களை திமுக தலைவர் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார். அதனை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் அறிவித்துள்ளார். 

திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதுமட்டும் அல்லாமல் மேற்கு தொகுதியில் மக்களின் பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புறநகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அதேபோல், வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாநகரில் கூடுதல் மேம்பாலமும், மேற்கு தொகுதியில் புதிய மேம்பாலமும் அமைக்கப்படும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, வேட்பாளர் முத்துசாமி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, டெலிபோன் நகர், வைகை நகர், வி.கோ.வீதி போன்ற பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பிரசாரம் மேற்கொண்ட அனைத்து பகுதிகளிலும் முத்துசாமிக்கு கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பளித்தனர்.

Top