05/Mar/2020 08:10:19
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும், நடப்பு சாம்பியன் ஆஸி.-தென் ஆப்பிரிக்க அணிகளும் மோதின.
மழையால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ரத்தானதால், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணி முதல்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் 4 ஆட்டங்களில் வென்ற நிலையில், இந்தியா நேராக இறுதிக்குள் நுழைந்துள்ளது.
இதன்பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. கேப்டன் லேனிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மழையால் ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற, 13 ஓவர்களில் 98 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.
மார்ச் 8 அன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.