logo
கொரோனா பரவல் எதிரொலி: கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு  வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை சரிவு

கொரோனா பரவல் எதிரொலி: கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை சரிவு

25/Feb/2021 09:18:36

ஈரோடு, பிப்:கொரோனா பரவல் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு  வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் கறவை மாட்டு சந்தை மிகவும் பிரசித்திபெற்றது. இதற்காக கேரளா,தெலங்கானா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம், நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

 குறிப்பாக கேரளா மகாராஷ்டிரம்மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்கு மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா  தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவின் தினசரி பாதிப்பில் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த இரு மாநிலங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில சுகாதார துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த இரண்டு மாநிலத்துக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வியாழக்கிழமை ஈரோடு கருங்கல்பாளையத்தில் கூடிய மாட்டு சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநில  வியாபாரிகள் ஒருவர்கூட வரவில்லை.பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வரவில்லை.

 இதன் காரணமாக மாட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது.  மாட்டுச் சந்தைக்கு 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு வந்தன. இதில் பசு மாடு ரூ. 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் ரூ 10,000 முதல் 15,000 வரை விற்பனையானது.

  வியாழக்கிழமை  80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக  நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் என்று கர்நாடக தெலங்கானா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் எண்ணிக்கை அதிகரித்த போதும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டது.

Top