logo
மறைந்தது பாடும் நிலா...

மறைந்தது பாடும் நிலா...

25/Sep/2020 01:22:31

பாடும் நிலா பாலு என உலகம் முழுவதுமுள்ள தமிழ்ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்(74) உலகத்தை விட்டு  மறைந்தார் என்ற செய்தியை இசை உலகமும் உயிருக்கு உயிராக நேசித்தும் ரசிகர்களின் இதயமும்  நம்ப மறுக்கிறது.ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை எஸ் பி சம்பமூர்த்தி-சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக  ஜூன் 4, 1946  பிறந்தார்.. இவருடைய தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா, இளைய தங்கைகள் ஆவார். 

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் எஸ். பி. பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966-இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 -ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 -ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.இவருக்கு 2016 -ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. 1960-களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். 6 முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.  முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு)  3 முறையும் பெற்றுள்ளார். மேலும், இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 -ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 -ஆம் ஆண்டு பிப்.8 -ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும், தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் எஸ்பிபி-யின்  குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். 


Top