25/Sep/2020 11:14:34
சென்னை வேளச்சேரியில், சாலையின் நடுவே அதிமுகவினர் வைத்திருந்த பேனர் முறிந்து விழுந்து உயிரிழந்த ஐடி ஊழியர் சுபஸ்ரீயின் பெற்றோர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினனை நேரில் சந்தித்து, சுபஸ்ரீ மரணம் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாக துணைநின்றதற்கு நன்றி தெரிவித்தனர்’
வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர் 24-9-2020 -அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினனை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து துணைநின்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 12.9.2019 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காகச் சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் துறை மீது சட்டத்தை முறையாகச் செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தைத் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகத் துணை நின்றதற்கு, சுபஸ்ரீயின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உடனிருந்தார்.