logo
பெங்களூருவில் இருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை: மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை: மு.க.ஸ்டாலின்

08/Feb/2021 06:07:59

புதுக்கோட்டை, பிப்:  பெங்களூருவில் இருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டையில் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த. சந்திரசேகரனின் இல்லத் திருமண விழாவை திங்கள்கிழமை காலையில்  நடத்தி வைத்தபின் அவர் மேலும் பேசியது: இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைக்கப் போவது உறுதி. 

அதற்காகத்தான் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மக்கள் குறைகேட்கும் கூட்டங்களை நடத்தி வருகிறேன். முதல் கட்டமாக 37 தொகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக 71-ஆவது தொகுதி கூட்டம் இன்று மாலை சிவகங்கையில் நடைபெறுவதோடு, 2ஆம் கட்டம் நிறைவடைகிறது. மூன்றாம் கட்டம் பிப். 12-ஆம் தேதி தொடங்குகிறது. 234 தொகுதிகளுக்கும் சென்று வருவேன். எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பதை சமூக ஊடகங்களில் ஏற்கெனவே பரவியுள்ள வீடியோக்கள் காட்டுகின்றன. அவர் தவழ்ந்து வந்து முதல்வர் ஆனாரா இல்லையா. அவர் இதனை மறுத்தார் என்றால் நான் என் கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

இப்போது பெங்களூருவில் இருந்து ஒருவர் அதிமுக கொடியுடன் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். நடக்க வேண்டியது நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் ஸ்டாலின். நிகழ்ச்சியில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ். ரகுபதி, கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன், கே.என்.நேரு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


Top