logo
பிப்.19-இல் இலுப்பூரில் மாபெரும் தனியார்துறை வேலை வாயப்பு முகாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பிப்.19-இல் இலுப்பூரில் மாபெரும் தனியார்துறை வேலை வாயப்பு முகாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

06/Feb/2021 08:36:13

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் வரும் 19.2.2021-ஆம் தேதி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்த தகவல்: படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. 


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாம்களில்  185 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 13,765 நபர்கள் கலந்து கொண்ட இம்முகாமில் மொத்தம் 3,160 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று வருகின்ற (19.2.2021) வெள்ளிக்கிழமை  இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில்  மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 130-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபா;களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களையும் தேர்வு செய்ய உள்ளனர். 

மேலும், உயர்கல்வி, சுயவேலை வாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர் . இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள்  www.tnprivatejobs.tn.gov.in <http://www.tnprivatejobs.tn.gov.in>என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பயன்பெறலாம். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பாகும். எனவே இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயன்பெற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Top