logo
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர்  நிவாஸ் மறைவு

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் நிவாஸ் மறைவு

03/Feb/2021 06:10:54

சென்னை: 1980 களில் தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் நிவாஸ். 1977 முதல் 1994 வரை தமிழ்ப் படங்களில் பணியாற்றியுள்ளார். 

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் ஆகிய பாரதிராஜாவின் ஐந்து தமிழ்ப் படங்களுக்கும் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் ஆகியவற்றின் ஹிந்தி ரீமேக் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த  நிவாஸ், பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம் படத்தை இயக்கினார். 4 படங்களை இயக்கியுள்ள நிவாஸ் - கோழி கூவுது, தனிக்காட்டு ராஜா, மை டியர் லிசா, சலங்கை ஒலி போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கடைசியாக 1994-ல் செவ்வந்தி என்கிற தமிழ்ப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார்.


 

கேரளாவைச் சேர்ந்த நிவாஸ், சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். சிறந்த ஒளிப்பதிவுக்காக இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கேரளாவில் நிவாஸ் (பிப்.1)  காலமாகியுள்ளார்.

நிவாஸின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

என் திரைப் பயணமான 16 வயதினிலே முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்குத் துணை நின்ற  பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர், என் நண்பன் திரு. நிவாஸ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.

Top