20/Jan/2021 10:58:50
ஈரோடு, ஜன: ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:
ஈரோடு சுயமரியாதையின் பிறப்பிடம். வரும் 24-ஆம் தேதி இங்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். இந்தியாவிலேயே மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன் முதலில் காங்கிரஸ் பேரியக்கம் தான் குரல் கொடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
தண்ணீர் விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் அவர் குரல் கொடுக்காதது வியப்பாக உள்ளது இதில் இருந்து யார் விவசாயி என்று உங்களுக்கே தெரியும். மேலாண்மை சட்டத்தால் விவசாயம் அழிந்து போகும் சிறு வியாபாரிகள் தங்களது வாழ்க்கைத் தரத்தை இழந்து விடுவார்கள். பொதுவிநியோக முறை இல்லாமல் போய்விடும் குறைந்த பட்ச ஆதார விலை இல்லாமல் போய்விடும். இந்தியாவில் பிஎஸ்என்எல் பொது நிறுவனம் இருந்தது அதற்கு உரிமை கொடுக்கவில்லை அதற்கு பதிலாக தனியார் நிறுவங்கள் கொடுக்கப்பட்டதால் இன்று அந்த நிறுவனம் இல்லாமல் போய்விட்டது.
130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஜியோ என்ற ஒற்றை தொலைதொடர்பு நிறுவனம் தான் இருக்கும் மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்குச் சென்று விடும். எனவே தான் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 2 ஜி அலைக்கற்றை உரிமை அளித்த விவகாரத்தைப் பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு புலனாய்வு அமைப்பு தவறு நடந்ததாக நிரூபிக்கவில்லை. அது ஜோடிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதில் நீட்தேர்வு வேளாண் சட்டம் ரத்து செய்ய வேண்டும். எம் எஸ் சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். சிறு குறு விவசாயிகள் பற்றி முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். நீட் தேர்வு விரும்பாத மாநிலங்கள் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தலைவர் ராகுல்காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட மாநிலத்தில் தேர்வு நடத்துவது தப்பில்லை. ஆனால் தமிழகத்தில் மொழிப்பாடம் பின்பற்றி படிக்கிறார்கள் இங்கு நடத்தக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
நடிகர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். ஏனென்றால் அவரும் மதசார்பற்ற கருத்துகளைக் கூறி வருகிறார். நாங்களும் அதை பற்றி தான் கூறி வருகிறோம். எங்கள் கூட்டணி மத சார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறது. இந்த தேசத்துக்கு பாதுகாப்பைத்தரக் கூடிய அரசியல் இயக்கமாக காங்கிரஸ் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை விட சட்டமன்றத் தேர்தலில் அதிக வெற்றி பெறுவோம். தென் இந்தியாவில் ராகுல் காந்திக்கு அதிக செல்வாக்கு உள்ளது. மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த அவருக்கு மக்கள் மகத்தான வரவேற்பு கொடுத்தனர் என்றார் அவர்.