14/Jan/2021 06:34:19
புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளம் வட்டார பகுதி வேப்பங்குடி கிராமத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கண்மாய்களில் மழைநீர் நிரம்பியுள்ளது. தற்போது நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் . இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து முளைக்கத்தொடங்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பொற்பனைக்கோட்டைசேர்ந்த விவசாயி பழனியப்பனுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களை தண்ணீரில் மூழ்கியதால் நெற்கதிர்கள் அழுகி சேதமடைந்துள்ளது. விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வடிந்தாலும், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து முளைத்து வரத்தொடங்கியுள்ளது. .நெற் பயிர்கள் பிழைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
ஏற்கெனவே சென்ற மாதத்தில் நிவர் மற்றும் புரெவி புயலின் போது தொடர்ந்து மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பாசன நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிரில் தண்ணீர் சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அருகில் வைத்திருந்த வைக்கோல்போர்கள்களும் மழைநீர் தேங்கி அழுகிவிட்டது .இதே போன்று அப்பகுதிகளிலுள்ள அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து முளைத்து வரத்தொடங்கியுள்ளது.
வீடு வந்து சேர வேண்டிய நெல்மணிகள் வயலிலேயே முளைக்கட்டியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்தப்பகுதியில் பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்து அரசின் நிவாரண உதவி கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.