11/Jan/2021 09:24:03
புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை அசோக்நகரில் குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ள சாலைகளை செப்பணித்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வாலிபர்சங்க நகரத் தலைவர் எஸ்.விக்கி, செயலாளர் எஸ்.பாபு, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, சிபிம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி உள்ளிட்டோர் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர்(பொ) ஜீவா.சுப்பிரமணியனிடம் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ள விவரம்:
அசோக் நகர் 41-ஆவது வார்டில் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளன. மேலும், இந்த கழிவுநீர் கால்வாயில் இருந்தும், கழிப்பறைத் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் கலக்கிறது. இதனால், இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்;. மேலும்,; பல்வேறு நோய்த் தொற்றுக்கும் இப்பகுதி மக்கள் ஆளாகும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பணிட்டுத்தர வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் சாலைகளை செப்பணிட விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.