logo
ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி- இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கும் பிரதமர் மோடி அறிவிப்பு

ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி- இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கும் பிரதமர் மோடி அறிவிப்பு

10/Jan/2021 09:21:52

தில்லி:   நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி ஒத்திகை பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், ஜனவரி 16-ஆம் தேதி  முதல்  பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமைஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், கொரோனா போராட்டத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியா அடுத்த படியில் காலெடுத்து வைக்கிறது. ஜனவரி 16 முதல் இந்தியாவில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகிறது.

நமது வீரமிகு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்னணி பணியாளர்கள் நாடு முழுவதும் 3 கோடி பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 50 வயதுக்கு மேலா னோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின்னர், உடல்நிலை பிரச்சினைகளுடன் இருக்கும் 50 வயதுக்கு கீழானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Top