23/Sep/2020 02:26:06
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ( AIKSCC) செப்டம்பர்-25 ஆம் தேதி
3 வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி அகில இந்திய அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னையன், சி.எம்.துளசிமணி,சுப்பு ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செப்டம்பர்-25 ஆம் தேதி காலை 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு,கோபிசெட்டிபாளையம், கடம்பூர் ஆகிய மூன்று ,இடங்களில் சாலைமறியல் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும்,மாதர் சங்கங்களும், இளைஞர், மாணவர் அமைப்புகளும் தோழமை கட்சியினரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்திய நாட்டின் வேளாண்மையைப் பாதுகாக்கவும், மக்களின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் நடத்தப்படும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமென அதில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.