logo
மக்கள் நலத்திட்டங்களைத் தடுக்க ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும்  முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி

மக்கள் நலத்திட்டங்களைத் தடுக்க ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி

03/Jan/2021 12:27:27

திருச்சி, ஜன:மக்களுக்கு வழங்கும் திட்டங்களை தடுக்க, ஸ்டாலின் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது காவல்காரன்பட்டியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

மகளிர் சுயஉதவிக் குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி என்று கூறினார், ஆனால் இங்கே வந்து பார்த்தால் மாநாடு போல் காட்சியளிக்கிறது. திருச்சி மாவட்டத்தில் 9,933 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 2,082 குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வளவு குழுக்களும் செயல்படுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் அம்மா.

அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலே, பெண்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும், வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்தில் வங்கி இணைப்பு கடனாக சுமார் 12,000 கோடி ரூபாய் வங்கிகளின் மூலமாக கடன் வழங்கி இருக்கின்றோம்.

புரட்சித் தலைவி அம்மா பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், மகளிர் சுயஉதவிக் குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு தான் செல்வார். அம்மா மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மீது தனி அக்கறையும் பாசமும் கொண்டிருந்தார். அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மீது தனி மரியாதை கொண்டுள்ளது.

அம்மா அறிவித்த திட்டங்களை இன்றைக்கு அம்மாவின் அரசு நிறைவேற்றி வருவதோடு, பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. நான் கிராமத்தில் பிறந்தவன். அதனால் கிராம மக்களின் தேவையை நன்கு அறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 313 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது, இதன் மூலம் 1650 புதிய மருத்துவ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக 130 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்க உள்ளது. இதனால், அடுத்தாண்டு முதல் 443 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு அம்மாவின் அரசு. அதேபோல, பல் மருத்துவம் பயில 150 ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும். ஏழை எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகள் மருத்துவர்களாக ஆக வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம்.

இன்றைக்கு நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 12 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வருகின்ற 4 ம் தேதி முதல் வழங்கப்படும். நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் உங்கள் இல்லங்களுக்கே வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்று மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பொங்கல் பரிசை தடுப்பது ஏன்?

ஆனால் ஸ்டாலினால் ஏழை மக்களுக்கு ரூ. 2500  கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த 2500 ரூபாயை அரசு யாருக்கு வழங்குகிறது. ஏழை எளிய மக்களுக்கு வழங்குகிறது. அந்த ஏழை எளிய மக்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதில் என்ன தவறு. ஏன் இதை தடுக்க நினைக்கிறார் ஸ்டாலின். அவர் எவ்வளவு முட்டுக்கட்டைகளை போட்டாலும், அதை அனைத்தையும் அம்மாவின் அரசு முறியடிக்கும்.

கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொடுத்த ஒரே அரசு, இந்தியாவிலேயே எங்களுடைய அரசு தான்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததை அம்மாவின் அரசு உயர்த்தி, தற்போது 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று செயல்படுத்தி வருகிறது.

அம்மா உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அம்மாவின் அரசு, 25,000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

ஏழை எளிய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தியது அம்மாவின் அரசு. திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்காக வழங்கப்பட்ட நான்கு கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து, தற்போது 1 பவுன் தங்கம் சுமார் 37,000 ரூபாயாக உள்ளது, அதனையும் வாக்குறுதி அளித்தப்படி வழங்கி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.

நிலம் அபகரிப்பு செய்த தி.மு.க.

ஆனால் தி.மு.க. 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் யாருக்கும் நிலம் வழங்கவில்லை. நிலத்தை வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்களுடைய நிலத்தை அவர்கள் அபகரிக்காமல் இருந்தாலே போதும். எங்கேயாவது விலைமதிப்புமிக்க நிலம் இருந்தால் போதும், அது உடனடியாக திமுகவினரால் அபகரிக்கப்பட்டது. அதனால் தான் அம்மா திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்த்தார்.

இன்றைக்கு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உழைக்கும் திறனற்ற முதியவர்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு, இன்றைக்கு சுமார் 90 சதவிகிதம் முதியவர்களுக்கு கொடுத்துள்ளோம்.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு நிறைவேற்றினோம். தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 9 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தி.மு.க. அராஜக கட்சி

தி.மு.க. ஒரு அராஜக கட்சி, ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். திமுக மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு பெண்ணை தாக்குகிறார். திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் ரெயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கின்றார், ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் நீங்களே எண்ணிப் பார்க்க வேண்டும்.

அண்ணா தி.மு.க. அரசு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு என்றும் துணை நிற்கும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அரசு, அண்ணா தி.மு.க அரசு. அப்படிப்பட்ட அம்மாவுடைய அரசு தொடர்வதற்கு உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.                                      


Top