logo
ஜன. 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

ஜன. 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

01/Jan/2021 05:57:53

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கை: அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

1.1.2021-இல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.  2.1.2021-இல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். 3.1.2021, 4.1.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும். தமிழகத்தில் இந்தாண்டு இயல்பை விட வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என்று அவர் தெரிவித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:கொள்ளிடம் 9 செ.மீ , திண்டிவனம் 7 செ.மீ , செஞ்சி, மரக்காணம் தலா 6 செ.மீ , ஆடுதுறை, செய்யூர், விளாத்திகுளம் தலா 5 செ.மீ , ராமேஸ்வரம், கடலூர், பாண்டிச்சேரி தலா 4 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

Top