logo
இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி:  அமைச்சர் சி.வி.சண்முகம்  அதிர்ச்சி தகவல்

இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி: அமைச்சர் சி.வி.சண்முகம் அதிர்ச்சி தகவல்

29/Dec/2020 10:58:44

சென்னை, டிச:அ.தி.மு.க.வின் அடிநாதமான இரட்டை இலையை முடக்க சிலர் சதி செய்துவருவதாக, விழுப்புரம் மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இளம்பெண்கள் பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடை பெற்றது. அப்போது, கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார். அப்போது, இந்த தேர்தல் நமக்கு இது ஒரு புதுமையான தேர்தல். காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் சந்திக்க உள்ளோம்.

இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தலாகும். காரணம், நமது சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். அது நடக்காது. அதை நடக்கவும் விடமாட்டோம். இருப்பினும் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

நமது கட்சியில், சில தலைவர்கள் வேண்டுமானால் கட்சிக்குத் துரோகம் செய்திருக்கலாம். ஆனால், தொண்டர்கள் யாரும் கட்சிக்குத் துரோகம் செய்யவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். தேர்தலின் போது, கருத்து வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றி எளிதாக கிடைக்கும் என கேட்டுக் கொண்டார்.


Top