logo
திரைப்பட இயக்குநரும், கதை வசனகர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் காலமானார்

திரைப்பட இயக்குநரும், கதை வசனகர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் காலமானார்

05/Dec/2020 05:36:01

ஈரோடு:  சிம்மராசி, முதல் சீதனம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநரும், கதை வசன கர்த்தாவுமான ஈரோடு சௌந்தர்(63) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை(டிச.5) காலமானார்.

ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு நாதகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஈரோடு சௌந்தர். தமிழ் திரை உலகில் பெரும் வெற்றிகள் மற்றும் விருதுகளைப் பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியதன் மூலம்  பிரபல வசன கர்த்தாவாக திகழ்ந்தவர்.

 சிம்ம ராசி என்ற திரைப்படத்தை சரத்குமாரை வைத்து இயக்கி டைரக்டராகவும் திறமையை வெளிப்படுத்தினார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் கூட்டணியில் உருவான நாட்டாமை உள்ளிட்ட படங்கள் மூலம் கொங்கு தமிழை தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர் ஈரோடு சவுந்தர். இவர் முதல் சீதனம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார். 

கடந்த சில ஆண்டுகளாக அவர் ஈரோட்டில் சொந்த ஊரான முள்ளாம்பரப்பு நாதகவுண்டன் பாளையத்ததில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவருடைய பேரன் கபிலேஷ் என்பவரை கதாநாயகனாக வைத்து அய்யா உள்ளேன் அய்யா என்ற சினிமாவை இயக்கினார்.

இந்தநிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஈரோடு சௌந்தர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி  சனிக்கிழமை  காலமானைர்.

ஈரோடு சவுந்தருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்திரி என்ற மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இயக்குநர் ஈரோடு சௌந்தரின் இறுதிச் சடங்குகள் ( டிச.6) ஞாயிற்றுக்கிழமை  அவரது சொந்த ஊரான நாத கவுண்டம்பாளையத்தில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

Top