logo
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை

05/Dec/2020 01:41:49

திருச்சி:  வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 7 பிரகாரங்கள் 54 உப சந்நிதிகள் என 150 ஏக்கருக்கு மேல் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14-ஆம் தேதி திரு நெடுந்தாண்டகம் என்கிற நிகழ்வுடன் தொடங்குகிறது.  முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் என்கிற பரமபதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 25-ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.

தமிழ்ப் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந்து உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். பருவ மழை தீவிரம், கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்கான பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோயில்ஆயிரங்கால் மண்டபம் அருகில் பந்தல் அமைப்பது. தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு  பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வழக்கம் போல் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது, வாகன நிறுத்துமிடம், மருத்துவ முகாம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு  கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  வரும் 24-ஆம் தேதி மாலை முதல் 25-ஆம் தேதி காலை 8 மணி வரை (25-ஆம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு பிறகு ஆன் லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் அரசு  வழிகாட்டுதலின்படி தரிசனம்  அனுமதி வழங்கப்படும்.

பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும் வயதானவர்கள், குழந்தைகள்,  கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வருகைமைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,ஆங்கில ஆண்டு கணக்கின்படி நடப்பாண்டில் ( 2020) ஜனவரி 5-ஆம் தேதியும் வரும் டிசம்பர் 25-ஆம் தேதியும் என ஒரே ஆண்டில் இருமுறை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Top