23/Nov/2020 09:55:45
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம், மோக்டா அருகே அம்லே கிராமத்தை சேர்ந்த சானியா என்பவரின் மனைவி மணிஷா, 7 மாத கர்ப்பமாக இருந்தார். திடீரென மணிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.
வெகுநேரமாக ஆம்புலன்சு வராததால் சானியா உள்பட 4 பேர் சேர்ந்து போர்வையில் மணிஷாவை தூக்கிக்கொண்டு 3 கி.மீ. தூரத்தில் உள்ள வாடா சாலைக்கு நடந்து வந்தனர். சுமார் 2 மணி நேர காத்திருப்புக்கு பின் வந்த ஆம்புலன்ஸில் மணிஷாவை ஏற்றிக்கொண்டு நாசிக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின், அதிக ரத்தபோக்கு காரணமாக மணிஷா அடுத்த நாள் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஆம்புலன்ஸ் வாகனம் வர காலதாமதம் ஆனதால் தான் தாயும், குழந்தையும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.