logo

இன்றைய சிந்தனை..(18.11.2020) வாழ்க்கை..

18/Nov/2020 09:20:58

உணவைத் தான் உண்டேன்... எப்படி மலம்  ஆனது.உயிரோடுதானே இருந்தேன். எப்படி மாண்டு போனேன்.மலம்தான் உணவாக இருந்ததா.மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா.இந்த சுருங்கி போன உடம்பு தான் இது வரை இளமையை சுகித்ததா.

பெருத்தன சிறுக்கும்.. சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா.இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான்.. செத்து தொலையவில்லையே என்று  மனைவியும், சுற்றமும் பேசியது,என்னை அவர்கள்  நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது எனக்கு நினைவுக்கு வந்தது.

இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்துக் கொண்டிருந்தது .இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்க வேண்டும் . அறுசுவை உணவை தேடித் தேடி உண்ணும் போதே, அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன். அனைவருக்கும் பயன்பட வேண்டிய  பொன், பொருளை ஒரு திருடனைப் போல் பதுக்கி இருக்க மாட்டேன். காலம் கடந்த ஞானம்.

 பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்.பிணமான பின் இந்த மாளிகையும், பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்.சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது. கண்ணே, மணியே என்று கொஞ்சிய தாயும்..  காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்  பிணமான பின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்! 

பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று, வீசி சென்ற பிறகு,    மண் என்னைப் பார்த்து  , மகனே  நானிருக்கிறேன் என் மடியில் வந்து உறங்கு என்று  என்னை மார்போடு தழுவிக் கொண்டது.  அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன  வெறுப்பாம் உலக பொய் வாழ்க்கை நீ நீயாக இரு..

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும், நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வயதானால் அந்த நோய் வரும். வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை.மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக, சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

முதுமை என்று எதுவும் இல்லை.நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.


Top