logo
தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையங்கள் திறப்பு

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையங்கள் திறப்பு

14/Nov/2020 07:16:48

சென்னை: தமிழகத்திலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் தகவல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நடப்பு ஆண்டிலும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னை இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையச் சேவையை 15.11.2020 முதல் 20.1.2021 வரை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக 1800-425-1757 என்ற எண்ணில் அழைத்து பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையிலும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், செங்கோட்டை – கொல்லம் நெடுஞ்சாலையில் புளியரை கிராமத்திலுள்ள பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் நெற்களஞ்சியம் அருகிலும், தேனி மாவட்டம், தேனி – குமுளி பிரதான சாலையில் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் வளாகம்.

கோயம்புத்தூர் மாவட்டம், பாலக்காடு (வழி- வாளையார்) நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் (நந்தி திருக்கோயில்) கோயிலிலும் மற்றும் பொள்ளாச்சி, பாலக்காடு (வழி: கோபாலபுரம்) நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் கிராமத்திலுள்ள பத்திரகாளியம்மன் திருக்கோயில் மண்டபத்திலும் தமிழக ஐயப்ப பக்தர்கள் பயன்பெறும் வகையில் தகவல் மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவல் மையங்கள் மற்றும் முக்கிய கோயில்களில் தற்போதுள்ள கொரோனா நோய் தொற்று சூழலில் பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய கொரோனா பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் அடங்கிய அறிவிப்பு பலகைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை மூலமாக சேவார்த்திகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்படும்.

முக்கிய தொலைபேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தகவல்கள் தெரிவிப்பதற்காக பணியாளர்களைக் கொண்டு அறிவிப்புகள் அடங்கிய நோட்டீசுகள் மையங்களில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி மற்றும் ஐய்யப்ப பக்தர்களுக்கு வழிகாட்டி விளம்பரப் பலகை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Top