03/Nov/2020 06:12:27
ஈரோடு: சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 8-ஆம் தேதி நடைபெறும் என்றார் வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் விக்கிரமராஜா.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மொடச்சூரில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் இன்று(3.11.2020) நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
பண்டிகை காலங்களில் கடைகளில் கொரோனோ ஆய்வு என்ற பெயரில் அபதாரம் விதிப்பதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வேளாண் சட்டத்தால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளை அத்தியவசிய பொருட்கள் பட்டியலிருந்து நீக்கிப்பட்டுள்ளதால் இதன் விலை உயர வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராடும்.அதுமட்டுமல்லாமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை ஒன்று திரட்டி தில்லியில் மாபெரும் பொதுக்கூட்டம் மாநாடு நடத்தப்படும் என்றார்.முன்னதாக, வணிகர் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.