logo
முருகனை இப்படி வழிபடுவதற்கு பின்னால் உள்ள வாழ்க்கை தத்துவம்

முருகனை இப்படி வழிபடுவதற்கு பின்னால் உள்ள வாழ்க்கை தத்துவம்

02/Nov/2020 12:22:54

ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம். அந்த வகையில் முருகனை வழிபட பாதயாத்திரை செல்கின்றனர். அதுமட்டுமின்றி காவடியும் எடுத்து செல்கின்றனர். முருகனை வழிபடும் முறைகளில் காவடி எடுத்தலும் ஒன்றாகும். நாம் ஏன் முருகனுக்கு காவடி எடுத்து செல்கிறோம் என்று தெரியுமா. இதன் பின்னணியில் உள்ள காரணத்தை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.


இடும்பன்: இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்கள் ஒருவர். அகஸ்தியர் ஒருமுறை தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கூறினார்.  அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும்  கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.


மாறுவேடத்தில் தோன்றிய முருகர்:  இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால், அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் விளக்கமளிக்கின்றனர்.

மனித வாழ்க்கை: இந்த காவடி எடுக்கும் வழக்கத்தில் இருந்து, நாம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை என்பதை கற்றுக்கொள்ள முடிகிறது.

Top