logo

இன்றைய சிந்தனை.. வாழ்க்கை வாழ்வதற்கே.தட்டிக் கழிக்க அல்ல.

02/Nov/2020 07:22:57

 வாழ்க்கை வாழ்வதற்கே.தட்டிக் கழிக்க அல்ல.

ஒவ்வொரு ஊரிலும் 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் குறைந்தது 50-க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் ஐடி கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.குறைந்தது 40,000-க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர். சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய்,  அஜித், சூர்யா அவர்கள் போல் இருக்க வேண்டும்.1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான்.ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.சரி,இதன் விளைவு என்ன என்று பார்ப்போமா.

1947 ஆண்டுக்கு முன் 13 - 15 வயதுக்குள் திருமணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. ஒரு டஜன் குழந்தைகள். ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். பெண்ணின் வேலையே பெற்ற பிள்ளை, குடும்பத்தோடு கொஞ்சி மகிழ்வதுதான். தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. தேவையும் இல்லாத மன நிலை.

1960 ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் என சர்வ சாதாரணமாக பெற்றுக் கொண்டார்கள். நிலை தொடர்ந்தது.1980 ஆண்டுக்கு பின் 100-இல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. விளம்பரமும் நாம் இருவர் நமக்கு இருவர் என்று சாக்கிய சதி வெளிப்படையாக பிரசாரம் செய்தது.

2000 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறி விட்டது. நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சதிப் பிரச்சாரம். ஒற்றை குழந்தையின் வளரும் மன நிலை எப்படி இருக்கும்.ஆனால் 2010 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளனர்.இதற்கு அறிவியல் ஆயிரமாயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.

1960 ஆண்டு வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20-இல் திருமணம். உணவு: ராகி, கம்பு, சோளம்,குதிரைவாலி,வரகு,கருப்புக் கொள்ளு,கருப்பட்டி.1975 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.உணவு: ஐ.ஆர்-8 அரிசி. 1992 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25. உணவு: பட்டை தீட்டப்பட்ட டபிள் பாலீஷ் அரிசி.2000 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30-க்குள். உணவு: துரித உணவு.

2010-க்கு மேல் உணவு: மைதா மாவில் தயாரித்த கேவல உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் எத்தனையோ அதிகம் பேர்.எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று நீங்கள் தீர்மானம் செய்யாமல் இறைவனை முழு மனதாக வேண்டி நல்லதை நினைத்து மனங்கள் முடித்தால் பாசத்தோடு வளர்த்த பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல் திருமணம் செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக மாடு வளர்த்தால் கேவலம். பால் கறந்தால் கேவலம்.மரம் வளர்த்தால் கேவலம்.விவசாயம் செய்தால் கேவலம்.இது நம் வாழ்வியல் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம்.ஐடி தொழில் போகிறோம்.கலாச்சாரம் மாற்றப் படுகிறது.தவறுக்கு சுய அறிவு இல்லாத இன்னொருவனிடம் கை கட்டி நிற்கிறோம்.

இஷ்டம் இல்லாத பல நிலையை கடந்து பணம் சம்பாதிக்கிறோம்.ஒரு கட்டத்தில் வெளியே போக சொல்கிறான்.வாழ்வை தொலைக்கிறோம்.இது எல்லாமே நம் நிஜ வாழ்வியலை கேவலம் என்று நாம் தொலைத்ததால் வந்த வினைதானே.

துபாய் போகிறேன் என்பான்.அவன் என்ன வேலை செய்வான் என்று அவனே வெளியில் சொல்ல முடியாது.ஆனால் தான் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தப் படுத்த தயங்கியவனாகவே கடைசி வரை வாழ்ந்து சாகிறான்.

நம் வீடு, நம் குடும்பம், என் தோட்டம்,என் மாடு, என் சாமி, என் கலாச்சாரம், என் தெய்வம்,என் பண்பாடு, என் மண்,என் ஊர் ,என் தேசம் என்று ஒற்றுமையில் துண்டாடப்பட்டு உடைகிறானோ அன்றே தொலைகிறான்.


ஆண் 20, 21 தாண்டிய உடன், பெண்கள் 17,18 வயதில் திருமணம் செய்து விட வேண்டும்.நான் சம்பாதித்தால்தான் திருமணம்.எனக்கு வெள்ளை மாப்பிள்ளை வந்த பிறகுதான் திருமணம் என்று எதையாவது கற்பனை செய்து பொன்னான காலத்தை தொலைத்தால் பொன்னான குழந்தைச் செல்வம் இருக்காது.கஷ்டம் என்பது தவறு அல்ல.அது வாழ்க்கைக்கு தேவை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.சரியான கல்வி அறிவு, நல் ஒழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து திருமணம் முடியுங்கள்.அத்தனையும் ஒரு பெண்ணே வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டால் ஆணே உனக்கு என்ன வேலை.அது ஆண் மகனுக்கும் அழகு அல்ல.அது அந்த பெண்ணுக்குமே சுவாரஸ்யம் இருக்காது.

பெண்களே உங்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அன்பும்,அறிவும் இருந்தால் கட்டாயமாக உங்கள் கணவனோடு சேர்ந்து முன்னேறி விடுவீர்கள். பல குழந்தை பெற்று சிறப்போடும் இருப்பீர்கள்.ரொம்ப கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடும் கணக்கு வேற மாதிரிதான் இருக்கும்.அப்பா சம்பாதித்து கொடுக்கும் பிள்ளைக்கு பெரிய அனுபவம்,  நம்பிக்கை இருக்காது. 

அதே நேரத்தில் அவள் வீட்டில் கார் கிடைக்குமா பவுன் கிடைக்குமான்னு பேயா அலையாமல் நம்ம குணத்துக்கு ஒத்து வருவாளான்னு பார்க்கும் ஆண்பிள்ளையாக ஆண் வாழ வேண்டும்.வாழும் வாழ்க்கையில் மனது ஒத்து போகிறதா பாருங்கள். வாழும் சிறந்த வயதை தொலைக்காதீர்கள்.தெய்வ நம்பிக்கை ஒன்றை மட்டும் அசைக்க முடியாத அளவு நிலையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்க்கை இனிமை ஆகியே தீரும்.

வாழ்க்கையில் கடைசி வரை ஏதாவது கடன்,ஏதாவது பிரச்சனை இருக்கும். எல்லாவற் றையும் முடித்து விட்டுதான் திருமணம் என்றால் வாழும் கலம் தொலைந்து போகும்.வாழ்க்கை வாழ்வதற்கே.தட்டிக் கழிக்க அல்ல.


Top