02/Sep/2021 12:17:11
ஈரோடு : ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்கெட்டில் 807 வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.இவர்களது சங்கத்தின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பழனிசாமி உள்பட 5 பேர் நிர்வாகிகளாக இருந்து வருகின்றனர். சங்க நிர்வாகிகள் உறுப்பினரான காய்கறி வியாபாரிகளிடம் கடந்த 2014 ஆண்டு அனைவருக்கும் நிலம் தருவதாக கூறி ரூ. 50 ஆயிரம் முதல் ரூ 70 ஆயிரம் வரை பெற்றுகொண்டு நசியனூர் அருகே 20 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.
ஆனால், நிலத்தை சங்க நிர்வாகிகள் உறுப்பினருக்கு இடத்தை பிரித்து தராமல் தங்களது மனைவி பெயர்களில் நிலத்தை பதிவு செய்துள்ளனர். பலமுறை நிலத்தை பிரித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தும் இடத்தை பிரித்துத் தராததால், தங்களிடம் நிலம் தராத நிலையில் , தற்போது சங்கத்திற்கு புதியதாக தேர்தல் அறிவித்தள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.மேலும் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.