25/Jun/2021 07:28:35
கரூர், ஜூன்: கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தில் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு மையங்கள் மூலம் உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட தகவல்: கரூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருவதால் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக அவர்களுக்குரிய உலர் உணவுப் பொருள்கள் அரிசி, பருப்பு மற்றும் மாதம் 10 முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கரூர் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மே (2021) மற்றும் ஜூன் (2021) மாதத்திற்கு 5,300 கிராம் அரிசி, 2.080 கிராம் துவரம் பருப்பு மற்றும் 20 முட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர் களுக்கு 7950 கிராம் அரிசி, 2482 துவரம் பருப்பு மற்றும் 20 முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ / மாணவியர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சத்துணவு மையங்களில் நேரில் சென்று உரிய உலர் உணவு பொருட்களை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம்.