24/Jun/2021 06:07:44
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சியில் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட 20 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட நேரமாக காத்திருப்பதை தடுக்கும் வகையில் வியாழக்கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாளும் 20 வார்டுகளில் சுழற்சி முறையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, வியாழக்கிழமை ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட சூரியம்பாளையம், ஜவுளி நகர், பெருமாள் மலை , இந்திராபுரம் ஆகிய பகுதிகளின் நடுநிலைப்பள்ளிகள், பூம்புகார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் அருகே காமராஜர் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வ உ சி பூங்கா விளையாட்டு மைதானம், கனியன் வீதியிலுள்ள நாடார் சமுதாய கூடம், கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி.
வில்லரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பம்பாளையம், காரபாறை, ரங்கம்பாளையம் , பழைய பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள், வளையக்கார வீதி , பெரிய மாரியம்மன் கோவில் வீதி மாநகராட்சி பள்ளிகள், டிவைன் பள்ளி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி மாநகராட்சி பள்ளி, மோளக்கவண்டன்பாளையம் மாநகராட்சி பள்ளி என 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பு சமயங்களில் அந்தந்த வார்டுக்குள்பட்ட பொது மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வார்டு பகுதியிலும் 100 பேர் வீதம் மாநகராட்சிப் பகுதியில் 2000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.