17/Jun/2021 06:31:05
சென்னை, ஜூன்: ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என முந்தை அதிமுக அரசு அறிவித்ததை உண்மையிலேயே
செயல்படுத்திட பாதுகாக்கப்பட்ட
வேளாண் மண்டலச் சட்டத்தில் விடுபட்டுப்போன திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்க்க
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சி என்ற பெயரில் கெயில், சாகர் மாலா, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என்றுபுதிய புதிய திட்டங்களை வெவ்வேறு பெயர்களில் கொண்டுவந்து விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவுத் திட்டங்களை தமிழக அரசு எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது.
மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பதிலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியே போதும் என்ற மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்கக் கூடிய ஒன்றிய அரசின் ஒற்றையாட்சிக் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும்,
மண்ணின் வளத்தைப் பாதிக்ககூடிட திட்டங்களைச் செயல்படுத்த மக்களிடம் கருத்துக் கேட்க தேவையில்லை என்ற மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை எதிர்த்து வெறுமனே கடிதம் மட்டும் எழுதாமல்,
பாராளுமன்றத்தில் தங்களுக்குள்ள எண்ணிக்கைப் பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஆளும் திமுக அரசு உறுதியான அரசியல்
மற்றும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு அவற்றைத்
திரும்பப்பெறச் செய்யவேண்டும்.
இவற்றைச் செய்துமுடித்து,
பாதுகாக்கப்பட்ட வேளாண்
மண்டலத்திற்கான அறிவிப்பின்
நோக்கத்தை முழுமைப்படுத்தி
தமிழக விவசாயிகளையும்,
விவசாயத்தையும் காத்திட
முன்வரவேண்டும்.
மேலும், அரியலூர், புதுக்கோட்டை மட்டுமின்றி
தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் மக்களையும், மண்ணையும்
பாதிக்கக்கூடிய ஹைட்ரோ
கார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த
தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைப்போகக் கூடாதென்றும்,
இது குறித்தான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்குத் தெளிவாக விளக்கிட வேண்டுமெனவும்
தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்
என சீமான் தெரிவித்துள்ளார்.