logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி  கூட்டுக்  குடிநீர் திட்டம்: அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன்  ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்: அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆய்வு

14/Jun/2021 08:57:40

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி  கூட்டுக்  குடிநீர் திட்டத்தை  அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன்  ஆகியோர்  திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயலில் அமைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் அமைப்புகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருசட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன்போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர்  திங்கள் (14.6.2021) கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர்  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர்  காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயனடையும்  புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, சுமார் 150 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நிலநீர் வல்லுநர்கள் மற்றும் நீர் பகுப்பாய்வாளர்கள் கொண்ட 52 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு திங்கள்கிழமை (14.6.2021) மற்றும்  செவ்வாய்க்கிழமை (15.6.2021) ஆகிய 2 நாள்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இச்சிறப்பு ஆய்வு குழுக்கள் திட்ட உருவாக்க அறிக்கையின் படி வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவு அனைத்து தரைநிலை, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும் செல்வது, குடிநீரின் தரம், நீரேற்று இடைவெளிகள் ஆகியவற்றின் நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தவும், குடிநீர் வழங்கல் குறித்து சம்பந்தப்பட்ட பொது மக்களிடம் நேரடி தொடர்பு கொள்வார்கள்.

அதனடிப்படையில் தற்போது  புதுக்கோட்டை மாவட்டம், ஆலவயலில் அமைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் அமைப்புகள்  பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதி வரை காவிரி குடிநீர் முறையாக வருகிறது. இங்கிருந்து 12 கி.மீட்டர் தூரம் வரை ஏற்கெனவே சாலை பணிகள் மேற்கொண்ட பொழுது குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பகுதிகள்  பார்வையிட்டு, அக்குழாய்களை விரைவில் சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தற்பொழுது 70 முதல் 80 சதவீதம்  குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீத குடிநீர் மட்டுமே ஓரிரு காரணங்களால் தடைப்பட்டுள்ளது. விரைவில் இதனையும் சரிசெய்து, இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் 16 லட்சம் பொதுமக்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மேலும் பொன்னமராவதி பகுதிக்கு ஏற்கனவே 8 லட்சம் லிட்டர் குடிநீர் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தற்பொழுது 15 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கவும், ஆலவயல் பகுதிக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் கே.என். நேரு.

ஆய்வின் போது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்கா ணிப்பு பொறியாளர்கள் முத்தையா, குணசேகரன், நிர்வாக பொறியாளர்கள் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top