08/Jun/2021 12:47:27
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர் அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுமுடி அருகே தாமரைப்பாளையம் பகுதியில் ஈரோடு மைன்ஸ் ஏ.டி சத்தியசீலன், ஜெகதீஷ்
உதவி புவியியலாளர், ஆர்.ஐ.சிலம்பரசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் கிராவல்
மண் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது.
அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு வருவதற்காக வருவாய் ஆய்வாளர் சிலம்பரசனை லாரியில் ஏற்றி விட்டு லாரியை பின் தொடர்ந்து ஜீப்பில் அதிகாரிகள் வந்து கொண்டு இருந்தனர்.
ஏற்கெனவே லாரியில் இருந்த பாபு (எ)கெளதம் லாரியை ஓட்டி வந்துள்ளார். கொடுமுடி பி.எஸ்.என்.எல் அலுவலம் அருகில் வரும் போது வேண்டுமென்றே சாலையின் இடதுபுரம் லாரியை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு லாரியில் இருந்து குதித்து வெளியே வந்தார். வெளியில் வந்த கெளதமை ஜீப்பில் வந்த அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது அவர்களை மிரட்டி தாக்க முயற்சி செய்து விட்டு அருகிலிருந்த புதருக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார்.
லாரியின் உள்ளே இருந்த சிலம்பரசன் வண்டி கவிழ்ந்த விபத்தில் லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து தப்பியோடிய பாபு என்கிற கௌதமை வலை வசி தேடி வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தேடப்பட்டு வரும் கெளதம் சிறு வயதிலேயே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சமீபத்தில் ஒரிரு ஆண்டுகள் முன்பு வெளியே வந்தவர். இவர் ஜெயிலில் இருந்து வந்த பின்பு லாரி வைத்து தொழில் செய்து வருவது தெரிய வந்தது. அதிகாரியை கொலை செய்யும் முயற்சியில் மண் கடத்தல் ஈடுபட்ட நபர் லாரியை கவிழ்க்க முயன்ற நிகழ்ச்சி இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.