08/Jun/2021 11:29:58
புதுக்கோட்டை,ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவைச் சேர்ந்த கூவாட்டுப் பட்டி,சின்ன கூவாட்டுப்பட்டி மற்றும் குறும்பர் தெரு ஆகிய மூன்று கிராமங்களை இலுப்பூர் வாழ் வெளிநாடுவாழ் தமிழர்கள் தத்தெடுத்து நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
இலுப்பூரை பூர்வீகமாக கொண்டு தற்பொழுது இலண்டனில் வசித்து வரும் பிரகாஷ் மற்றும் சென்னையில் வசித்துவரும் பாபு ஆகியோர் தங்கள் பிறந்த ஊரான இலுப்பூரை சுற்றியுள்ள மூன்று கிராமங்களை கொரோனா காலத்தில் தத்தெடுத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, இலுப்பூர் தாலுகாவைச் சேர்ந்த கூவாட்டுப்பட்டி,சின்ன கூவாட்டுப்பட்டி,மற்றும் குறும்பர் தெரு ஆகிய கிராமங்களை தத்தெடுத்தனர்.பின்னர் , கொரோனா பேரிடர் முடியும் வரை இந்த கிராம மக்களுக்கு தேவையான 5 கிலோ அரிசி பை,7 கிலோ காய்கறிகள், மளி கை பொருள்கள் உள்பட 10 வகையான பொருள்களை விநியோகம் செய்வதென முடிவு செய் து முதல்கட்டமாக சனிக்கிழமை 120 குடும்பங்களுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான உதவிப் பொருட்களை வழங்கினர்.
இது குறித்து சமூக சேவகர் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்: வெளிநாட்டில் வாழும் என் நண்பர்கள் ஏராளமானோர் தாங்கள் பிறந்து வளர்ந்த இலுப்பூர் பகுதி மக்களுக்கு உதவி கள் செய்ய நினைத்தனர்.
அதன்படி இரண்டு கட்டமாக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு ரூ 3 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.பின்னர் பொத்தையம்பட்டி,வெள்ளியங்குடி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள 120 குடும்பங்களை தத்தெடுத்து ரூ 1 இலட்சம் மதிப்பிலான 12வகையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்கினர்.
தற்பொழுது கூவாட்டுபட்டி,சின்ன கூவாட்டுப்பட்டி ,குறும்பர்தெரு ஆகிய மூன்று கிராம மக்களுக்கு ரூ 1 இலட்சம் மதிப்பிலான அத்தியவாசியப் பொருள்களை வழங்கியுள்ளனர். எங்கெல்லாம் மக்கள் சிரமப்படுகிறார்களோ அங்கு இது போன்ற நண்பர்களின் மூலம் மனித நேயத்துடன் உதவி செய்ய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நில அளவை அலுவலர் ரா.சதீஷ், இடையப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்வரன், மற்றும் கூவாட்டுப்பட்டி , சின்ன கூவாட்டுப்பட்டி, குறும்பர் தெரு கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெளிநாடு வாழ் தமிழர் லண்டன் பிரகாஷ் ,சென்னை பாபு ஆகியோர் வழிகாட்டுதலின்படி சமூக சேவகர் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைத்திருந்தார்.