07/Jun/2021 04:21:12
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தென்னநகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குடிநீர்த்தொட்டி விநியோகம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பேரூராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்களும் அனைத்து கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி அடுத்த தென்நகர் ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மினி வாட்டர் டேங்க் செயல்பட்டு வந்த நிலையில் அதை பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு காரணமும் இன்றி துண்டித்ததால் குடிதண்ணீர் வசதி இன்றி சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஒரு வருட காலமாக தவித்து வந்தனர்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடமும் பேரூராட்சி அலுவலரிடமும் வட்டாட்சியரிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சிபிஎம், விசிக, சிஐடியு, அனைத்திந்திய விவசாய சங்கத்தினர் முன்னிலையில் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி
கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை
மாவட்ட துணைச் செயலாளர் ஒலி புயல், நகர பொறுப்பாளர் கே.டி.முருகேசன், சிஐடியு
அரசு போக்குவரத்து புதுக்கோட்டை மண்டல தலைவர் கே கார்த்திகேயன், அரசு போக்குவரத்து புதுக்கோட்டை
மாவட்ட துணை பொதுச்செயலாளர் சாமிஅய்யா, அரசு போக்குவரத்து பட்டுக்கோட்டை
கிளை செயலாளர் பி ராஜசேகர் ஆகியோர்
பங்கேற்றனர்.